தருமபுரி, ஜூலை 06 –
தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின விவசாயிகள் மாநில மாநாடு பேரணி மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில மாநாட்டில் சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை போன்ற தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாய சங்கத்தினர் பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணி தருமபுரி ராமக்காள் ஏரிகரை அருகில் இருந்து ராஜா பேட்டை வரை பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி காவிரி படுகையின் 12 மாவட்டங்களில் வேளாண்மை தொழிலுக்கும் பேரழிவும் 22 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டு பாலைவனம் ஆகிறது. ஜல்லிக்கட்டை மீட்டு எடுத்தோம், காவிரி தண்ணீர் உரிமையை மீட்க வேண்டாமா, மேகதாது அணை கட்டதிட்ட அறிக்கை தயாரிக்க அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அடுத்து வரக்கூடிய தலைமுறைகளுக்காக ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஒன்றிணைந்து போராட வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி, கரும்புக்கு டன்னுக்கு ரூபாய் 4,500, பாலுக்கு கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 உயர்த்தி வழங்க வேண்டும்.
உரம் விலை குறைப்பு, நிதி நீர் இணைப்பு, மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடகா அரசின் நடவடிக்கையை கண்டித்தும், காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஈச்சம்பாடி அணையிலிருந்து பம்பு மூலம் 40 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கொண்டும் கோஷம் எழுப்பிக் கொண்டும் பேரணியாகச் சென்றனர். இந்த பேரணியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் இறுதியில் குப்புசாமி நன்றி கூறினார்.



