வேலூர், ஜூலை 04 –
தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் மாநில அரசு தணிக்கை துறை ஆய்வாளர் மன்றம் சார்பாக தமிழக நிதி அமைச்சரின் உத்தரவை மதிக்காத தலைமை தணிக்கை இயக்குனர் (ம) சிறப்பு இயக்குனரை கண்டித்தும் தணிக்கையாளர்களின் 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க மாநில தலைவர் ஆ.பாபு தலைமை தாங்க, மாநில அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொதுச்செயலாளர் வ.மாரிமுத்து துவக்கி வைத்து பேச மாநிலத் தலைவர் வெ.மகேந்திர குமார் போராட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநில பொருளாளர் திலகன் நிறைவுறையாற்றி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் உத்தரவுக்கு மாறாக ஊழியர்களை தொலைதூர தணிக்கை பணிக்கு அனுப்புவதை கைவிட வேண்டும். குறிப்பாக பெண் ஊழியர்களை 100 கிலோ மீட்டருக்கு மேல் தாண்டி தணிக்கை பணிக்கு அனுப்புவதை கைவிட வேண்டும். சொந்த காரண விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புகளுக்கு அனுமதி தர வேண்டும். மாநில அரசு தணிக்கை துறையில் உள்ள 6300 தணிக்கை காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பேரூராட்சிகளில் தணிக்கை முறையை தனியார் மையமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளில் குற்ற குறிப்பானையை வழங்குவதை கைவிட வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட வருவாய் மாவட்டங்களான திருப்பத்தூர் ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய மாவட்ட அளவிலான தணிக்கை பணிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.



