மார்த்தாண்டம், ஜூலை 3 –
மாத்தூர் தொட்டி பாலம் அருகே நீதிமன்ற உத்தரவை மீறி கிறிஸ்தவ வழிபாடு கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த கிறிஸ்தவ வழிபாடு கூடத்தை சீல் செய்து மூட நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து இந்து முன்னணி திருவட்டாறு ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஐயப்பன் தலைமையில் இன்று திருவட்டாறு சந்திப்பு பகுதியில் போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணியினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அங்கு குவிந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகம் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் ஆர் டி சுரேஷ் உட்பட்ட பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் மாத்தூர் தொட்டி பாலம் செல்ல நடந்தனர். அப்போது ஏடிஎஸ்பி கலைஅழகன் தலைமையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆர் டி ஓ புஷ்பா தேவி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த போவதாக போலீசார் தெரிவித்திருந்தனர். ஆர் டி ஓ வுக்காக போராட்டம் நடத்தியவர்கள் காத்து இருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்த டி ஆர் ஓ போராட்டம் நடத்தியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் அருகில் ஒரு பேக்கரியில் சென்று போலீசாரிடம் பேசி கொண்டு இருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகம் தனது காரை எடுத்து வந்து திருவட்டாறு – மார்த்தாண்டம் சாலையில் நிறுத்தி சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி பாஜக நிர்வாகிகளிடம் போலீசார் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் தள்ளு முள்ளாக மாறியது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக போலீசார் கைது செய்து சிலரை வாகனத்தில் ஏற்றியும், சிலரை நடத்தியும் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மண்டபத்திற்கு முன் இந்து முன்னணி கொடியை இந்து முன்னணி நிறுவாகிகள் கட்டினர். அதை போலீசார் அகற்றியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டம் காரணமாக திருவட்டாறு மார்த்தாண்டம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மொத்தம் ஆண்கள் பெண்கள் உட்பட 37 பேர் கைது செய்யப்பட்டனர்.



