நாகர்கோவில், ஜூலை 2 –
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முட்டம் ஊராட்சிக்குட்பட்ட கடியப்பட்டணம் கடற்கரை பகுதியில் உள்ள குப்பை கிடங்கு மற்றும் குப்பைகளை தரம் பிரிக்கும் கூடாரம் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கீழக்கடியப்பட்டணம் பகுதியில் உள்ள மீனவ கூட்டுறவு சங்க நியாய விலை கடை திடீர் ஆய்வு மேற்கொண்டு, குடும்ப அட்டை அரிசிதாரர்களுக்கும் வழங்கப்படும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவைகள் சரியான அளவில் வழங்கப்படுகிறது என கேட்டறியப்பட்டதோடு இருப்பு வைக்கப்பட்டுள்ள ரேஷன் பொருட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் ரூ.2.37 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் பழுது பார்க்கும் பணியினை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கடியப்பட்டினத்தில் சீரமைக்கப்பட்டு வரும் பயணிகள் நிழற்கூடை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகளை விரைந்து முடித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
குளச்சல் நகராட்சிக்குட்பட்ட குளச்சல் அரசு மருத்துவமனை திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ வசதிகள் குறித்தும், மருத்துவ பயனாளர்களை காத்திருக்க வைக்காமல் அவர்களின் நோயின் தன்மை அறிந்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள ஆண்கள் பிரிவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகளிடம் நலம் விசாரித்ததோடு காத்திருக்கும் அறையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக சீரமைத்திட நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் உள் நோயாளிகளுக்கு வழங்கப்பட இருந்த மதிய உணவின் தரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து குளச்சல் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ3.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவ கட்டிட பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளிவளாகத்தில் ரூ.3.37 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை பணிகளை விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து குளச்சல் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தின் சமையலறை ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரத்துடன் பேண அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து குளச்சல் உப்பளம் பகுதியில் செயல்பாட்டில் உள்ள நுண்உரம் செயலாக்கம் மற்றும் கழிவுகள் கையாளும் மையத்தினை ஆய்வு மேற்கொண்டு பணியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு தேவையான நோய்த்தடுப்பு உபகரணங்கள் வழங்குமாறு துறை அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.
நடைபெற்ற ஆய்வில் குளச்சல் நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர், ராஜேஷ், நாகராஜ், உதவி செயற்பொறியாளர் வாலி, நகராட்சி பொறியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



