நாகர்கோவில், ஜூன் 29 –
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று நாகர்கோவில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கேன்சர் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே இங்கு கேன்சர் ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. தற்போது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டணி அரசு தமிழகத்தில் அமைந்துள்ளது. இந்த கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கேன்சருக்கான சிகிச்சை மையம் கட்டப்பட்டு, பணிகள் அனைத்தும் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. ஒன்றிய அரசின் கதிர் இயக்கத்துறை லைசென்ஸ் பெற வேண்டும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்று, விரைவில் கேன்சருக்கான ரேடியோ தெரபி சிகிச்சை மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை மற்றும் கேன்சர் தொடர்பான விழிப்புணர்வு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து கேன்சர் தடுப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய பொறுப்புகள் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். கட்சியை பலப்படுத்தும் வகையில் அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, வட்டாரத் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சந்தித்து கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார்.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தில் எந்த நிலைப்பாட்டையும் நாங்கள் எடுக்கவில்லை. புதிய அரசு பொறுப்பேற்று இருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்று குறைந்த நாட்கள்தான் ஆகிறது. மக்கள் நல பணிகளில் இந்த அரசின் செயல்பாடுகளை நாங்கள் உற்று நோக்கி வருகிறோம். எதற்கெடுத்தாலும் குறை சொல்ல நாங்கள் விரும்பவில்லை. மக்கள் நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்பட வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் தான் எதையும் பார்க்க வேண்டும்.
டெல்லி பிரதிநிதி நியமனம் சரியா? தவறா? என்பதை ஆராய்ந்து பார்க்க கூடாது. இதை ஆதரிப்பதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இதை நாங்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லை. இவ்வாறு அமைச்சர் ராஜேஷ்குமார் கூறினார். இந்த பேட்டியின் போது மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.



