மார்த்தாண்டம், ஜூன் 26 –
குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த 37 வயது கூலி தொழிலாளிக்கு 31 வயதில் மனைவி உள்ளார். அந்தப் பெண் திருவனந்தபுரத்தில் ஒரு கால் சென்ட்ரில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் தொழிலாளியின் அண்ணன் மகனான 27 வாலிபரும் வசித்து வருகிறார். இந்த நிலையில் கூலி தொழிலாளியின் மனைவிக்கும் அந்த வாலிபருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. சித்தி உறவுமுறை என்பதால் உறவினர்கள் அவர்கள் நடவடிக்கையில் முதலில் சந்தேகம் கொள்ளவில்லை. இதனை பயன்படுத்தி இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்கள்.
இதற்கிடையே ஒரு கட்டத்தில் வாலிபருக்கு இனிமேல் சித்தி தான் வேண்டுமென முடிவெடுத்து உள்ளார். இதன் காரணமாக சித்தி தனது கணவருடன் வெளியில் சென்று வருவது வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே கணவருடன் செல்லக்கூடாது எனவும், தன்னுடன் தான் பேச வேண்டும் எனவும் சித்தியை வாலிபர் கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் அதிர்ந்து போன சித்தி என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார். இதை தொடர்ந்து சித்தி வாலிபருடன் பேசுவதை நிறுத்திவிட்டு அவரை புறக்கணித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சம்பவத்தன்று இரவு சித்தப்பாவிடம் தகராறு செய்து மறைத்து வைத்திருந்த சுத்தியலால் அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து அவர் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். உடனடியாக அவர் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வந்தனர்.
இதற்கிடையில் சித்தப்பாவும் தன்னை தாக்கியதாகவும், அதனால் காயம் ஏற்பட்டதாக அந்த வாலிபரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரித்து வருகின்றனர்.


