நாகர்கோவில், ஜூன் 24 –
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா விளையாட்டு மைதானத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடை கோடி கிராமங்களில் உள்ள வீரர் வீராங்கனைகள் அண்ணா விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்று, மாவட்ட தேசிய அளவில் சிறந்து விளங்குகிறார்கள். இங்கு தினந்தோறும் வந்து பயிற்சி மேற்கொண்டு செல்கிறார்கள். மைதானத்தில் சிறுவர் சிறுமியர்கள், பெரியவர்களுக்கென நீச்சல் குளம் பயன்பாட்டில் உள்ளது. இச்நீச்சல் குளத்தினை மேலும் சீரமைத்திட மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள மகளிர் விளையாட்டு வீரங்கனைகள் விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுதியில் உள்ள பழுதுகளை சீரமைத்திட அறிவுறுத்தப்பட்டது. அத்தோடு அவர்களுக்கு தயார் செய்யப்பட்ட உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து பளு தூக்கும் வீரர்கள் அறை, கூடைபந்து பயிற்சி மைதானம் உள்ளிட்டவைகளை சீரமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
அத்தோடு மைதானத்துக்குட்பட்ட வணிக வளாகங்களில் செயல்பட்டு வரும் கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்துபவர்கள் முறையாக வாடகை செலுத்துகிறார்களா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் விளையாட்டு மைதானத்தில் உள்ள படிப்பகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. படிப்பகத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும் விளையாட்டு வீரர்களுக்கான தட்டச்சு பயிற்சி மையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தட்டச்சு பயிற்சி மையத்தினை விரிவுப்படுத்தி விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி வழங்க மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.
விளையாட்டு மைதானத்தினை சீரமைக்க வேண்டுமென விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதனடிப்படையில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானம், பெண்கள் விடுதி, பளுதூக்கும் கூடம், உடற்பயிற்சிக்கூடம், நீச்சல்குளம், கழிப்பறைகள் என பல்வேறு சீரமைப்பு பணிகள் ரூ.1.19 கோடி மதிப்பில் சீரமைக்கப்படவுள்ளது என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜாண் ஆசிர், பொறியாளர் ஸ்டீபன், துறை அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



