நாகர்கோவில், ஜூன் 23 –
குமரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 2 மாத ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் மகாலட்சுமி ஆகியவர் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ் துறையின் மக்களைத் தேடி மருத்துவத் திட்ட ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதித்து மருந்து பெட்டகம் வழங்குதல் போன்ற பணிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாதம் ரூ.5, 500 ஊக்கத்தொகை பெற்று பணி செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். 2 மணி நேரம் பணி என்று பணி அமர்த்தி விட்டு 8 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த அரசு பொறுப்பில் இருந்த போது ஒப்பந்த ஊழியர்கள் 42 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. பெண்கள் நல அரசாக தங்களை அடையாளப்படுத்தும் தமிழக அரசு உடனடியாக இந்த ஊழியர்களுக்கு மாதம் ஒன்று ரூ. 15,000 ஊதியம் வழங்குவதுடன் பணி உத்திரவாதத்தினை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து சங்கத்தின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதன் பேரில் கடந்த 2.6.2026 அன்று ஊதியம் வழங்க மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரூ 5 கோடிக்கான காசோலை அனுப்பப்பட்டது. ஆனால் தற்போது வரை ஊழியம் வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
எனவே மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும், நிர்வாகத்தில் நடைமுறைக்கு மாறாக ஊழியர்கள் மீது வேலைப்பளு அதிகரிப்பதை உடனே நிறுத்த வேண்டும். இது தொடர்பான எழுத்துப்பூர்வமான உத்தரவை அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



