நாகர்கோவில், ஜூன் 22 –
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயத்தின் கோபுரம் மற்றும் கோவில் சீரமைப்புப் பணிகள் நீண்ட காலமாக தொடங்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. கடந்த 14 ஆண்டு காலமாக இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை என்பதால், கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் கவலையடைந்த அப்பகுதி பொதுமக்கள், இக்கோவிலை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மை ஜீவன் எயிட் டிரஸ்ட் அமைப்பிடம் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, மை ஜீவன் எயிட் டிரஸ்ட் சார்பில் உடனடியாக இதற்கான நடைமுறைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக, சிவன் கோவிலின் கோபுரத்தை புதுப்பிக்கவும், இதர சீரமைப்புப் பணிகளை உடனே மேற்கொள்ளவும் வலியுறுத்தி இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், 14 ஆண்டுகாலமாக முடங்கியுள்ள இக்கோவில் திருப்பணியை விரைந்து தொடங்கக் கோரி, மை ஜீவன் எயிட் டிரஸ்ட் சார்பில் மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் (சுசீந்திரம்), இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கு முறைப்படி கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
“14 ஆண்டு காலமாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தின் திருப்பணியை அறநிலையத்துறை விரைந்து கையில் எடுத்து, இப்பகுதி பக்தர்களின் நீண்ட கால மனக்குறையை தீர்க்க வேண்டும்” என மை ஜீவன் எயிட் டிரஸ்ட் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



