கிருஷ்ணகிரி, ஜூன் 20 –
கிருஷ்ணகிரியில் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் வளாகத்தில் 32 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறவுள்ளதையடுத்து அரங்குகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர்
ச.தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா, ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ மருத்துவர் இளையராஜா, கிருஷ்ணகிரி தவெக சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன், அதிமுகவை சேர்ந்த பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி நகரில் ஆண்டுதோறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் 32 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் செல்வி கீர்த்தனா மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் வினோத் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர். சுமார் 30 நாட்களாக நடைபெறும் இந்த அகில இந்திய மாங்கனி கண்காட்சியை பார்வையிட தமிழக மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவார்கள்.
பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளுடன் இந்த அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் ‘மா’ ரகங்களை பார்வையிட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை லட்சக்கணக்கானோர் இங்கு வருவது வழக்கம். இன்று நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் மைய மாவட்ட செயலாளர் சுரேஷ், கிழக்கு மாவட்ட செயலாளர் முரளி விஜய், மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல், தொழிலதிபர் கோல்டன் சுரேஷ், நிர்வாகிகளான தென்னரசு, வேலவன், மற்றும் நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன், உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



