நாகர்கோவில், ஜூன் 12 –
குமரி தந்தை என மக்களால் போற்றப்படுபவர் மார்ஷல் நேசமணி. “குமரி தந்தை”, “கன்னியாகுமரி மாவட்டத்தின் சிற்பி”, “மார்ஷல்” என அனைத்து மக்களால் புகழப்பட்டு வரும் மாபெருந்தலைவர். குறிப்பாக “பெரியவர்” என பெரியவர்களால் போற்றப்படும் பெருமைமிக்க தலைவர், நீதிக்காக போராடிய நெஞ்சுரமிக்க தலைவர், நேர்மையோடு வாழ்ந்து காட்டிய தலைவர்.
இவரது 132-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்து மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், மார்ஷல் நேசமணி மகன்வழி பேரன் ரெஞ்சித் அப்பலோஸ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட்சுஷ்மா, நாகர்கோவில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரகுராம், நாகர்கோவில் மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சரோஜா, மாமன்ற உறுப்பினர் விஜிலா ஜஸ்டஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



