நாகர்கோவில், ஜூன் 11 –
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடி படையினர் செயல்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பொது மக்கள் அதிகம் கூடும் முக்கியப் பகுதியான பேருந்து நிலையங்களில் இந்தச் சிறப்புப் படையினர் பொதுமக்கள், பெண் பயணிகள், மற்றும் மாணவிகளிடம் நேரடியாகப் பேசி விழிப்புணர்வு மற்றும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடக்கும் குற்றங்களைத் தடுப்பது குறித்தும் மேலும் பெண்களுக்கு பாதுகாப்பான உணர்வையும் ஏற்படுத்தினர்.
இந்த சிங்க பெண் படை மூலம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த அதிரடிப்படையினர் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்வார்கள். இது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் குற்றங்களைத் தடுக்க உதவுகிறது.
பெண்களிடமிருந்து வரும் அவசர கால அழைப்புகள் (100/1091) மற்றும் புகார்களுக்கு மிக விரைவாகச் சென்று நடவடிக்கை எடுப்பதே இந்தப் படையின் முதன்மைப் பணியாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கடத்தல் முயற்சிகள் மற்றும் பொது இடங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் பணிகளில் இப்படை ஈடுபடுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டமானது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.



