தஞ்சாவூர், ஜூன் 5 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முதல் நாளிலேயே மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நீண்ட கோடை விடுமுறைக்கு பிறகு நண்பர்களை ஆசிரியர்களையும் சந்தித்த மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர் பள்ளி வளாகங்களில் உற்சாகமான சூழல் நிலவியது.
பள்ளியின் நுழைவாயில்களில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், சில பள்ளி களில் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மாணவர்கள் அன்புடன் வரவேற்று புதிய கல்வி ஆண்டுக்கான வாழ்த் துகளை தெரிவித்தனர். மேலும் புதிய கல்வி ஆண்டில் முதல் நாளிலேயே முதல் பருவத்திற்கான பாட புத்தகங்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. சீருடை, நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர் சௌராஷ்டிரா தெருவில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை கலெக்டர் ரேவதி மாலை அணிவித்து வரவேற்று, அவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில்: மாணவர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அன்றைய பாடங்களே அன்றைய தினமே படிக்க பழகிக்கொள்ள வேண்டும். படித்ததை எழுதி பார்க்க வேண்டும். கல்வியினையும், விளையாட்டையும் ஒருங்கே பயல வேண்டும். உடல் நலத்தினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். படிப்புடன் ஒழுங்கீனத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்திடும் வகையில் கல்வி பயின்று சிறந்து விளங்க வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் விஜய் சரவணன் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையர் கண்ணன், முதன்மை கல்வி அதிகாரி பேபி, மாநகராட்சி கவுன்சில் செந்தில், பள்ளி தலைமை ஆசிரியை சுந்தரவள்ளி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



