நாகர்கோவில், ஜூன் 4 –
தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் மு பிரதாப் வாழ்த்தினார்.
அவர் தமது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: அன்பிற்கினிய மாணவ மாணவியர்களே புதிய கல்வியாண்டின் பள்ளி திறப்பு நாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி என்பது உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகப்பெரிய சக்தியாகும். புதிய நம்பிக்கைகள், புதிய இலக்குகள் மற்றும் புதிய சாதனைகளுடன் இந்தக் கல்வியாண்டைத் தொடங்குங்கள். பள்ளிக்கு தவறாமல் வருகை தந்து, ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் சிறந்த கல்வி அடைவுகளையும், நல்ல ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி, கல்வி, விளையாட்டு மற்றும் கலைத் துறைகளில் சிறந்து விளங்கி, உங்கள் பள்ளிக்கும், பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இந்த புதிய கல்வியாண்டு உங்களுக்கு அறிவு, திறன், வெற்றி மற்றும் மகிழ்ச்சியை வழங்கிட எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள். “இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் சிற்பிகள்” என குறிப்பிட்டுள்ளார்.



