நாகர்கோவில், ஜுன் 2 –
குமரியில் நாளை மறுநாள் புதிய ஆண்டு கல்விக்காக பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் தக்கலை சரகத்திற்குட்பட்ட, கண்ணாட்டுவிளை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
மேலும் மாணவர்கள் இயற்கையான சூழலில் கல்வி கற்கும் வகையில் பள்ளி வளாகங்கள், சுற்றுப்புற சூழல், கழிப்பறைகள், குடிநீர் வசதி, வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திட வேண்டும். ஆசிரியர்களாகிய நீங்கள் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மருத்துவம் உள்ளிட்ட மேல்படிப்புகளுக்கான முன்னுரிமை, அரசு வேலைகளில் முன்னுரிமைகள் குறித்து மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துக் கூற வேண்டும். ஒவ்வொரு மாணவர்களிடையேவுள்ள தனித்திறமைகளை கண்டறிந்து, அத்திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் தற்போதைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு எந்த வகையில் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என நன்கு புரிந்து கற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாக விரைவுப் பலகையினை நன்கு பயன்படுத்திட கற்றுக் கொடுக்க வேண்டும்.
மேலும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பாடங்களை கற்றுக்கொடுக்கும்போது மாணவர்கள் எளிதாக, ஆர்வமாக புரிந்து கொள்ளும் வகையில் கற்றுக் கொடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்திட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், அனைத்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
நடைபெற்ற ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டார கல்வி அலுவலர் த.ஜெயசிங், தலைமை ஆசிரியர்கள் ஜோஸ் பிரகாஷ் (கண்ணாட்டுவிளை அரசு தொடக்கப்பள்ளி), தி.தமிழ்ச்செல்வி (இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி), ஆசிரியை சாரதா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



