தஞ்சாவூர், மே 25 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் பச்சை பயிறு, உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கிறது. அதன் ஒரு பகுதியாக நிகழாண்டு ராபி பருவத்தில் பயிறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் பச்சை பயிறு, உளுந்து கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நிகழாண்டு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை க்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக பச்சை பயிறு 35 டன்னும் உளுந்து 4000 டன்னும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பச்சைப்பயிறு, உளுந்து விளை பொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து, ஈரப்பதம் 12சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு உலர வைத்து அயல் பொருள்கள் கலைப்பின்றி விவசாயிகள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு நன்கு உலர வைக்கப்பட்ட தரமான பச்சை பயிறு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 87.68 வீதத்திலும், உளுந்து கிலோவுக்கு ரூபாய் 78 வீதத்திலும் கொள்முதல் செய்யப்படும். பச்சைபயிறு, உளுந்து விளை பொருளுக்கான கிரைய தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மாவட்டத்தில் மே 11 முதல் ஜூலை 9 வரை 60 நாட்களுக்கு பச்சை பயிறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கள், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூட்டங்களை அணுகி பதிவு செய்து தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து பயனடையலாம்.



