நாகர்கோவில், மே 25 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொல்குடி திட்டத்தின்கீழ் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட புரையிடம் பகுதியில் 7 வீடுகளும், பெருங்குருவி பகுதியில் 4 வீடுகளும், செறுகிடத்துக்காணி பகுதியில் 11 வீடுகள் 22 பழங்குடியினர் பயனாளிகளுக்கு தலா ரூ.5,73,000 வீதம் ரூ.1.26 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து, வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் அஸ்திவார பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் தற்போதைய நிலை குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். நடைபெற்று வரும் பணிகளை எவ்வித தொய்வுமின்றி, விரைந்து முடித்திட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மோதிரமலை பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 95 சதவீதம் நிறைவடைந்துள்ள பணிகளை விரைந்து முடித்து பழங்குடி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நடைபெற்ற ஆய்வில் கடையால் பேரூராட்சி செயல் அலுவலர் ஜோஸ்லின் ராஜ், கடையால் பேரூராட்சி இளநிலை பொறியாளர் பாரத்ராஜ், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



