நாகர்கோவில், மே 23 –
நாகர்கோவில் மாநகராட்சியில் நிறைவடையாத அம்ரூத் குடிநீர் திட்டம்; பொறுப்பு மேயர் மேரி பிரின்ஸி லதா நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகர்கோவில் மாநகராட்சி 6வது வார்டு பள்ளிவிளை அடுத்த சானல்கரை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள வீடுகளுக்கு அம்ரூத் குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் இதுவரை வழங்கவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு பழைய இணைப்பு மூலம் 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல வீடுகளில் எந்த குடிநீர் இணைப்புகளும் இல்லாமல் மக்கள் தெரு குழாயில் வரும் குடிநீரை நம்பி வாழ்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்க தொடக்கப்பட்ட பணிகளை பாதியில் நிறுத்தி சென்றுள்ளனர்.
தமிழக அரசு ரூ.251.43 கோடியில் புத்தன் அணை அம்ரூத் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி நாகர்கோவில் மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கி நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் இதுவரை பல வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் அம்ரூத் குடிநீர் திட்டத்தில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாத பகுதிகளுக்கு உடனடியாக இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



