நாகர்கோவில், மே 22 –
குமரி மாவட்ட ஆட்சியர் 4 மாதமாக தகுதியான நபர்கள் இருந்தும் காலியாக உள்ள துணை தாசில்தார் பணியிடங்களை தற்காலிக துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்கி நிரப்பாமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் உள்ளது. உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டும். மாவட்ட நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கில் வேண்டுமேன்றே இடம் மாற்றம் செய்ததை உடனே ரத்து செய்ய வேண்டும்.
தாலுகாக்களில் பணிபுரியும் தாசில்தார்களை ஓராண்டு காலம் பணி நிறைவு செய்யாமல் பணியிட மாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறங்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அலுவலக அறை முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்கம் சார்பில் குமரி மாவட்ட கிளை சார்பில் பணி புறக்கணிப்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் கிராம நிர்வாக அலுவலர்களை மோசமாக பேசியதாகவும் மன உளைச்சல் ஏற்படும் அளவில் மோசமாக பேசி தற்கொலைக்கு தூண்டும் விதத்தில் பேசியதாகவும் கூறி அப்போதும் அலுவலர்கள் ஆட்சியர் அலுவலகம் அறைக்கு முன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதும் கோஷம் எழுப்பியதும் அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மன்னிப்பு கேட்டதும் மன்னிப்பு கேட்டதால் போராட்டத்தை விலக்கிக் கொண்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக பொதுமக்கள் ஒவ்வொரு திங்கள் கிழமை தோறும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கும் புகார் மனுக்கள் மாதம் ஒருமுறை நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் ஆகியவற்றுக்கு கூட எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறது.
தற்போது புதிய அரசு பொறுப்பேற்று உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



