நாகர்கோவில், மே 20 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட காவல் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து குலசேகரம் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் தேங்கபாறை விளை பகுதியைச் சேர்ந்த அஜித் (27) மற்றும் புல்லுவிளை பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து இருவர்மீதும் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் போதைப்பொருள் விற்பனைச் கும்பலுடன் இவர்களுக்கு தொப்பு உண்டா? எனவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமீப காலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும், திடீர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து நடைபெறும் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்துவதில் காவல்துறை கவனம் செலுத்தி வருகிறது.
போதைப்பொருள் விற்பனை அல்லது பயன்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து போலீசாருக்கு தகவல் வழங்க வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.



