நாகர்கோவில், மே 18 –
தக்கலை அருகே உள்ள சரவிளை பகுதியை சேர்ந்தவர் தாரிக். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷைபா நிஷா (24). இந்த தம்பதியருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சம்பவதினம் வீட்டில் இருந்த ஷைபா நிஷா தனது மகனுடன் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரையும் குழந்தையையும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதை அடுத்து மாயமான மகளையும் குழந்தையும் கண்டுபிடித்து தருமாறு ஷைபா நிஷாவின் பெற்றோர் தக்கலை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது போன்று இரணியல் அருகே உள்ள நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகள் சரண்யா (17). இவர் தற்போது பிளஸ் 2 படிப்பை முடித்துவிட்டு மேல் படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல தயாராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டிலிருந்த சரண்யா அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று வருவதாக தனது பெற்றோர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை சரவணன் பல்வேறு இடங்களை தேடி பார்த்தும் மகள் கிடைக்காததால் இரணியல் போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். இரணியல் போலீசார் பிளஸ் டூ முடித்த மாணவி சரண்யா குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


