கன்னியாகுமரி, மே 11 –
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது கோடைகால சீசன் தொடங்கி நடைபெற்று வருவதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளும் வருகை அதிகமாக காணப்படுகிறது.
இதனால் திருவள்ளுவர் பாறைக்கு செல்லும் படகு சேவையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும், விஐபி என மூன்று வித டிக்கெட்டு முறையால் சுற்றுலா பயணிகள் தனித்தனி வரிசைகளில் நிறுத்தப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிக அளவில் சுற்றுலா பயணிகள் திரண்டதால் காவல்துறை மற்றும் ஊழியர்களால் கூட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தள்ளமுள்ளு ஏற்பட்டதில் சிலர் காயமடைந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இந்த நிலையில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கன்னியாகுமரியில் உள்ள படகுத்துறைக்கு செல்லும் இடங்களை நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூட்ட நெரிசல் ஏற்படும் நேரங்களில் பேரிகாடுகள் அமைத்து பயணிகள் சிரமம் இன்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது டிஎஸ்பி ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ பெருமாள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.



