தருமபுரி, மே 08 –
தருமபுரியில் மாம்பழ குடோன் மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் வரும் காலங்களில் மாம்பழங்கள் விற்பனை வரத்து அதிகரிக்கும் என்பதால் இயற்கையான முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகின்றனவா, உடல் நலத்துக்கு பாதிப்பு உண்டாக்கும் வகையில் செயற்கையான முறையில் ரசாயன திரவம் (எதிபான் மற்றும் எதியோபான்) எத்திலின் ரீபைனர் பவுடர் நேரடியாக பழங்களில் வைத்தல் முறை மற்றும் கார்பைட் கற்கள் வைத்து பழுக்க வைக்கப்படுகின்றவா என கண்காணித்து, அவ்வாறான செயல்கள் காணும்பட்சத்தில் அவ்வணிகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டதன் அடிப்படையிலும், தருமபுரி மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த புகார் அடிப்படையிலும் கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் மாம்பழம் மற்றும் குளிர்பானங்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தலைமை மற்றும் மேற்பார்வையில் ஒன்றியம் வாரியாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தருமபுரி உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில் தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை மற்றும் சந்தைப்பேட்டை, திருப்பத்தூர் ரோடு, பென்னாகரம் ரோடு, பழையபேருந்து நிலையம், பாரதிபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மாம்பழம் மொத்த விற்பனை குடோன்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் உழவர் சந்தையில் ஒரு கடையில் தரமற்ற சந்தேகத்திற்கு இடமான பழங்கள் சுமார் 20 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டு வாங்கும் இடம் நபர்கள் குறித்து தெரிந்து வாங்கி விற்பனை செய்வதை கண்காணித்திட உழவர் சந்தை நிர்வாக அலுவலரிடமும், விற்பனை விவசாயி இடமும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சந்தப்பேட்டை பகுதியில் ஆய்வு செய்ததில் இரண்டு மொத்த வியாபாரிகளிடம் ரசாயன திரவங்கள் தெளித்து பழுக்க வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் சுமார் 100 கிலோ அளவிலானது பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரசாயன திரவம் மற்றும் கலவை கலந்த பாட்டில் ஸ்பிரேயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சேர்க்கை முறையில் பழுத்த பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 மற்றும் 2,000 உடனடி அபராத விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது.
பேருந்து நிலைய பகுதியில் உள்ள பழக்கடைகள் ஆய்வு செய்ததில் ஒரு கடை குடோனில் ரசாயனம் பவுடர்கள் காணப்பட்டது. ஆனால் மாம்பழங்கள் ஏதும் காணப்படவில்லை இன்று அல்லது நாளை காவேரிப்பட்டினம் பகுதியில் இருந்து கொள்முதல் செய்து பழங்கள் வரலாம் என விற்பனையாளர் தெரிவித்தார். பவுடர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து உரிமையாளரை எச்சரித்து உடனடி அபராதம் ரூபாய் 2,000 விதிக்கப்பட்டது.
நுகர்வோர்கள் மாம்பழங்கள் இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டுள்ள பழங்களா என அறிய ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அந்த நீரில் பழுத்த பழங்களை போடும்போது பழங்கள் மேலே மிதந்தால் அது சேர்க்கை முறையில் பழுத்தவை, இயற்கையானவை பாத்திரத்தில் அடியில் போய் தங்கும் என மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார். இதே போல் பழங்களின் பின்பகுதி (காம்பு) பகுதியில் நுகரும்போது இயற்கையான பழுத்த பழங்கள் பழவாசனை வீசும், செயற்கை எனில் அந்த இடம் சாம்பல் பூசினார் போல் இருக்கும். மருந்து வாசனை அடிக்கும் மேலும் பழங்கள் ஒரே சீராக மஞ்சளாக இருந்தால் அது சேர்க்கை முறையில் பழுத்த பழங்கள் என அறிந்து கொள்ளலாம்.
மேலும் பழங்கள் அறிந்தால் சதைப்பகுதி வெள்ளையாக காணப்பட்டாலும் அது சேர்க்கை முறையில் பழுத்தவை என அறியலாம் விழிப்புணர்வு செய்தி தெரியப்படுத்தினர். மாவட்ட முழுவதும் தொடர்ச்சியாக ஆய்வுகள் தொடரும் ஆய்வில் விதிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நியமன அலுவலர் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் சேர்க்கை முறையில் பழங்கள் விற்பனை செய்வது கண்டால் 9444042322 என்ற எண்ணிற்கு தகவல், புகார் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு செய்தனர்.



