சென்னை, ஏப்ரல் 29 –
சென்னையைச் சேர்ந்த டிஆர்ஏ ரியல் எஸ்டேட் நிறுவன, கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்லேட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரியல் எஸ்டேட் துறைக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
இது குறித்து டிஆர்ஏ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரஞ்சித் ரத்தோர் கூறுகையில், “எங்களைப் பொறுத்தவரை, புதிய கண்டுபிடிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். ஸ்லேட் நிறுவனத்துடனான இந்த கூட்டணியை இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புதிய தொடக்கமாகவே (கன்ஸ்டரக்ஷன் 2.0) நான் பார்க்கிறேன். தொழில்நுட்பம், பல மொழிகளில் தொடர்பு கொள்ளும் வசதி, முன்கூட்டியே கணிக்கும் திறன் மற்றும் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துதல் ஆகியவை ஒன்றிணைந்து, தரமான வீடுகளை குறித்த நேரத்தில் வழங்க இது உதவும். நாங்கள் வளர்ச்சி அடைந்து வரும் இந்த நேரத்தில், எதிர்காலத்திற்குத் தேவையான புதிய அமைப்புகளை உருவாக்குவது எங்களுக்கு எப்போதும் முக்கியமான ஒன்றாகும்” என்றார்.
மேலும் ஸ்லேட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஏஐ பிரிவின் தலைவர் செந்தில் குமார் பேசுகையில், “கட்டுமானத் துறையில் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றம் நடந்து வருகிறது. இதில் உள்ள சிக்கலான பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க பழைய முறைகள் மட்டுமே போதாது. ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு பணிகளைச் செய்து, விரைவான முடிவுகளை எடுக்கவும், திட்டத்தை முன்கூட்டியே கணித்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பலன்களை வழங்கவும் டிஆர்ஏ நிறுவனத்துடன் இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று கூறினார்.



