கிருஷ்ணகிரி, ஏப். 22 –
“திட்டங்களை பார்த்து, தி.மு.க விற்கு ஓட்டளியுங்கள், அ.தி.மு.க., வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்யுங்கள்” என மதியழகன் எம்.எல்.ஏ. பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று, தி.மு.க., வேட்பாளர் மதியழகன் எம்.எல்.ஏ இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று மாலை, திருப்பத்துார் கூட்ரோடிலிருந்து, பர்கூர் பஸ் ஸ்டாண்ட் வரை 2,000க்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக வந்து வேன் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் கடந்த, 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செய்துள்ளார். ஒரு எம்.எல்.ஏ.,வாக பர்கூர் தொகுதிக்கு, 500 கோடி ரூபாய் திட்டங்களை பெற்றுத்தந்துள்ளேன். தமிழகத்தில், பெண்கள், தி.மு.க., ஆட்சி மீண்டும் வரவேண்டும் என பூரிப்போடு இருக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நம் கூட்டணியில் ஒரு கட்சி கூட வெளியேறவில்லை. நாம் ஒற்றுமையாக ஒரே கொள்கையில் நின்று மத்திய, பா.ஜ., அரசை எதிர்க்கிறோம். இதனால் நம்மை முடக்கும் நோக்கில் மத்திய, பா.ஜ., அரசு தொகுதி மறுவரை என்ற பெயரில் தென் மாநிலங்களை முடக்க நினைத்தனர். ஆனால் அதை நாம் முறியடித்தோம். ஆனால் அடிமை, அ.தி.மு.க.,வோ, பா.ஜ.,வின் காலில் விழுந்து அவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மைகளாக மாறி உள்ளது.
பர்கூரில், நான் செய்த திட்டங்களை எண்ணிப்பார்த்து ஓட்டளியுங்கள். எதிரே நிற்கும், அ.தி.மு.க., வேட்பாளர் இ.சி.கோவிந்தராசன் கட்டப்பஞ்சாயத்து சங்கங்களின் தலைவராக இருப்பவர். அவர் உங்களுக்கு வேண்டுமா என சிந்தித்து பாருங்கள். அவர் வென்றால், நீங்கள் சாலையில் நடமாட கூட முடியாத நிலை உருவாகும். அதை மக்கள் சிந்திக்க வேண்டும். மக்களோடு மக்களாக நிற்கும் என்னை வெற்றி பெற வைத்தால் தான். தி.மு.க ஆட்சிக்கு வரும். தமிழக முதல்வரை மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.



