தென்காசி, ஏப்ரல் 20 –
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கழக வேட்பாளர் கிருஷ்ணமுரளியை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கழக வேட்பாளராக போட்டியிடும் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பாவை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சொக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிற மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட கடையநல்லூர் தொகுதியில் சொக்கம்பட்டியில் கூடியிருக்கிற மக்கள் சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலை சின்னத்தில் உங்களது வாக்குகளை அளிக்க வேண்டும்.
உங்களுடைய வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் புதல்வர் அவர் விட்டுச் சென்ற பணிகளை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். அவரை கடந்த தேர்தலில் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைத்த நீங்கள் இந்த முறையும் அதேபோல மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டும். ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து தன்னுடைய தொகுதிக்கு பணியாற்றி நிறைய திட்டங்களை கொண்டு வந்த அவர் இந்த முறை ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்தில் பணியாற்ற உள்ளார்.
கடந்த தேர்தலில் அதிமுக அமமுக பிரிந்து நின்ற காரணத்தால் திமுக ஆட்சிக்கு வந்தது அதன் விளைவாக ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் இந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்தாண்டுகளில் தமிழகம் பின்னோக்கி தான் சென்றுள்ளது. சுதந்திரம் பெற்ற நாள் முதல் அதிமுக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வரை 5 லட்சம் கோடி கடன் இருந்த தமிழ்நாட்டை தற்போது பத்து லட்சம் கோடியாக ஆக்கிய பெருமை மு.க ஸ்டாலினையே சாரும்.
திமுகவினர் தங்களது வாக்குகளை பெற ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து வெற்றி பெறலாம் என்று நினைக்கின்றனர். அவர்களுடைய எண்ணத்தை முறியடிக்க வேண்டும். மீண்டும் புரட்சித்தலைவி அம்மா ஆட்சி அண்ணன் இபிஎஸ் தலைமையில் அமைய நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
திமுக காங்கிரஸ் கூட்டணி மத்திய மாநில அரசாக இருந்த போது கூட 3 லட்சம் கோடி தான் தமிழகத்திற்கு காங்கிரஸ் அரசால் வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய பாஜக அரசு இந்த 11 லட்சம் கோடி வரை தமிழகத்திற்கு வழங்கியுள்ளனர். ஆனால் இதையெல்லாம் மறைத்து பேசுகிறார் முதலமைச்சர். மத்திய அரசுடன் இணக்கமான மாநில ஆட்சி அமைந்தால் அனைத்து திட்டங்களையும் அனைவரும் பெற முடியும். அதனால் பொதுமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



