நாகர்கோவில், ஏப். 17 –
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருவதால் வாகன சோதனைகள் அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை நடத்தப்பட்ட சோதனையில் ஒரே நாளில் ரூ.19 லட்சத்து 69 ஆயிரத்து 350 ரூபாய் ரொக்க பணம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் கன்னியாகுமரி தொகுதியில் இரண்டு இடங்களில் ரூ.3,37,750 பறிமுதல் செய்யப்பட்டது. குளச்சல் தொகுதியில் ரூ 5,80,000 சிக்கியது. விளவங்கோடு தொகுதியில் 51 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் அதிகபட்சமாக ரூ 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட முழுவதும் கடந்த 15ஆம் தேதி முதல் நடந்த சோதனையில் இதுவரை மொத்தம் 1, 07,75, 150 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.



