கன்னியாகுமரி, ஏப். 1 –
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (49). இவரது 2வது மகன் ராஜேஷ் (22) என்பவர் நாகர்கோவில் உள்ள தனியார் ஷோரூமில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவ தினம் அவரது பைக்கில் நண்பரான ஏசு அந்தோணி என்பவரை கன்னியாகுமரியில் விட்டுவிட்டு, நாகர்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது பொற்றையடி என்ற பகுதியில் வைத்து எதிரே வேகமாக வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேஷ் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆனந்தகுமார் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கேரள பதிவெண் கொண்ட கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


