நாகர்கோவில், மார்ச் 30 –
வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு இன்று முதல் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் ஆர்வமுடன் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் தென்கோடி முனையில் அமைந்துள்ள 229- சட்டமன்ற தொகுதியான கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் வேட்பாளர் மரிய ஜெனிபர் தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்: எங்களுடைய இலக்கு பெரியது, கனவும் பெரியது. ஆனால் பயணம் கடுமையானது. ஆனாலும் எங்களுடைய உழைப்பை போட்டு கொண்டு இருக்கின்றோம். மற்ற அரசியல் கட்சிகள் அவர்களுடைய வெற்றிகளையும் இருப்பிடத்தையும் தக்கவைத்துக்கொள்ள அரசியல் செய்கின்றார்கள். ஆனால், நாங்கள் ஒரு புதிய வெற்றியை உருவாக்க நாம் தமிழர் கட்சி அரசியல் செய்கிறது என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.



