சென்னை, மார்ச் 23 –
தமிழ்நாடு மாநில இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு தமிழகத்தில் 51 சட்டமன்றத் தொகுதிகளில் தனித்து போட்டியிடும். சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் தயாராக உள்ளனர் என்று தமிழ்நாடு மாநில இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவுத் தலைவர் சூசை அறிவிப்பை வெளியிட்டார்.
இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் சூசை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு தமிழகத்தில் 51 இடங்களில் போட்டியிடும். சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். மேலும் தலித் தலைவர்கள் திருமாவளவன், ஜான்பாண்டியன், ஜெகன் மூர்த்தி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் எங்கள் கட்சி போட்டியிடாது.
மேலும் தமிழகத்தில் எங்கள் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே 51தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறோம். இந்திய அளவில் ஒரு தேசிய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு கரும்பு விவசாயி சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னம் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.



