ஈரோடு, மார்ச் 21 –
ஈரோடு மாவட்டத்துக்கு தனித்துவ அடையாளமாக ‘தேர்தல் அரசன் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வருகிற 30-ந் தேதி முதல் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதற்கிடையே ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
100 சதவீதம் வாக்குப்பதிவு என்கிற இலக்கை மையமாக கொண்டு ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கந்தசாமி தலைமையில் அனைத்து துறைகள் சார்பில் இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன்படி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மகளிர் திட்டத்துக்குட்பட்ட மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கான வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி நடக்கப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் கோலங்களால் நிரம்பியது. இந்த கோலங்களை கலெக் டர் கந்தசாமி பார்வையிட்டு பாராட்டினார். இதில் சிறந்த பெண்களுக்கு கலெக்டர் புத்தகங்கள் பரிசு வழங்கினார்.
தமிழ்நாடு பொதுத்தேர்தலுக்காக மாவட்டம் வாரியாக தனித்துவமான சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி ஈரோடு மாவட்டத்துக்கு சிங்க முகத்துடன் கூடிய’தேர்தல் அரசன்’ சின்னம் தனித்துவ அடையாளமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தனித்துவ சின்னத்தை பத்ம பூஷன் விருது பெற்ற எஸ்கே எம்.மயிலானந்தன் முன்னிலையில் கலெக்டர் கந்தசாமி அறிமுகப்படுத்தினார்.
அப்போது கலெக்டர் கந்தசாமி கூறும்போது, ‘ஈரோடு மாவட்டம் 40 சதவீதம் காடு பகுதியை கொண்டது. சத்திய புலிகள் காப்பகம் தந்தை பெரியார் வனவிலங்குகள் சரணாலயம் ஆகியவை நமது மாவட்டத்தில் உள்ளன. நமது மாவட்டத்தில் உள்ள காடுகளில் புலிகள் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. சிங்கம் நமது காட்டில் இல்லை என்றாலும் காட்டுக்கு அரசன் சிங்கம் தான்.
அதுபோல ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தான் சிங்கம். எனவேதான் சிங்கம் வாக்களித்து விட்டு வந்து விரல்களை உயர்த்தி காட்டுவது போல தேர்தல் அரசன் என்கிற சின்னத்தை வெளியிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



