நாகர்கோவில், மார்ச் 16 –
மத்திய பாரதிய ஜனதா அரசின் தவறான வெளியுறவு கொள்கையினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டருக்கும், வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது வரை மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்கி நிலைமையை சீராக்கும் முறையான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை வகித்தார். மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள். மற்றும் கூட்டணி நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.
இது போன்று கிள்ளியூர் தொகுதி கருங்கல் ராஜீவ் காந்தி ஜங்ஷன் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் மொத்தம் 60க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



