திருப்பூர், மார்ச் 11 –
போயம் பாளையம் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஜி.எம்.பாலன் நகர் 2-வது விரிவு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 10 வருடங்கள் மேல் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் வீட்டுமனைகள் அங்கீகரிக்கப்படாததால் மாநகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. ஆனால் மாநகராட்சி சார்பில் வீட்டு வரி, பாதாள சாக்கடை வரி, உள்ளிட்ட அனைத்து வரிகளும் அப்பகுதி மக்கள் மாநகராட்சியில் கட்டணமாக கட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தங்கள் பகுதிக்கு பொது குடிநீர் குழாய், மற்றும் வீடுகளுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் ஒன்று திரண்டு இன்று மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு வரி கட்டின ரசீதை வைத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஒரு வாரத்திற்குள் குடிநீருக்கான நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.



