நாகர்கோவில், மார். 6 –
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று குமரி மாவட்டம் வந்தார். அவர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடந்த நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசு விழாவில் பங்கேற்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய விழாவில் மகளிர் திட்டத்தின் சார்பில் 3000 மகளிருக்கு ரூபாய் 10.61 கோடி மதிப்பில் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன், கூட்டுறவுத்துறை சார்பில் 175 பயனாளிகளுக்கு ரூ.1.91 கோடி மதிப்பில் டாப்செட்கோ கடனும், 35 பயனாளிகளுக்கு ரூ.7.38 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனும், 1025 பயனாளிகளுக்கு ரூ.7.38 கோடி மதிப்பில் பயிர்கடனும், 500 பயனாளிகளுக்கு ரூ.8.09 பயனாளிகளுக்கு சுயஉதவிக்குழு கடனும், 12 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக் கடனும், 15 பயனாளிகளுக்கு ரூ.7.50 இலட்சம் மதிப்பில் ஆதரவற்ற விதவை மகளிர் கடனும், 7 மகளிர்க்கு மகளிர் தொழில் முனைவோர் கடனும், 21 பயனாளிகளுக்கு ரூ.17.20 இலட்சம் மதிப்பில் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கான கடனும், 3 பயனாளிகளுக்கு ரூ.16 இலட்சம் மதிப்பில் பணிபுரியும் மகளிர் கடன் உட்பட 91.20 கோடியில் நல உதவிகள் அனைத்து துறைகளிலும் வழங்கப்பட்டன என பேசினார்.
மேலும் வனத்துறை சார்பில் ரூ.24 இலட்சம் மதிப்பில் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறுவதற்கு காணி தொல்குடி பயிற்சி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), பிரின்ஸ் (குளச்சல்), தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் துறை அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



