தூத்துக்குடி, மார்ச் 3 –
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்” தொடர்பான 3 நாள் கருத்தரங்கம் இன்று தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், குத்துவிளக்கேற்றி கருத்தரங்கினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றி பேசுகையில், “சட்டங்கள் பல இருந்தாலும், அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்துவதில் அரசு அலுவலர்களுக்குப் பெரும் பொறுப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது குழந்தைகள் அணுகும் போது, அவர்களை அன்புடன் கையாண்டு முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
அரசு அலுவலர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சட்ட முறையிலான தீர்வுகள் மற்றும் ஒரு குற்றம் நிகழும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் (POSH Act), வரதட்சணைத் தடுப்புச் சட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் குறித்து விளக்கப்படுகிறது.இரண்டாம் நாள் குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ (POCSO) சட்டம் மற்றும் அரசு செயல்படுத்தும் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மூன்றாம் நாள் கற்றவற்றை கள ஆய்வு மூலம் செயல்படுத்துதல், நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, பெண் தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகள் மற்றும் மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் (MTP Act) குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு) வ.கி.தீபு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் ஷர்மிளா மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



