நாகர்கோவில், பிப்ரவரி 19 –
திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து கொண்டது, பிரேமலதாவின் அரசியல் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி எனவும், இதனால் தேமுதிக புத்துயிர் பெற்றுள்ளதாகவும் அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: யாரும் எதிர்பாராத நேரத்தில், சரியான தருணத்தில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து கொண்டுள்ளது. பிரேமலதா எடுத்த சரியான முடிவாக தான் தெரிகிறது. தேமுதிக தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்து விட்டன. அசுர பலத்தில் இருந்த தேமுதிக 2006 தேர்தலில் தனித்தே களம் கண்டது. அந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் கூட , அனைத்து வேட்பாளர்களும் 10% விருந்து,20% வரையிலும் வாக்குகளை பெற்றிருந்தார்கள். அதன் பிறகு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் தேமுதிக வென்றது. அப்போது விஜயகாந்த் எதிர்கட்சி தலைவருமானார்.
அதன்பிறகு திமுகவுக்கு எதிராகவே களத்தில் இறங்கி தேர்தலை சந்தித்த தேமுதிக தொடர்ந்து படுதோல்விகளை தான் தழுவியது. அப்போது பிரேமலதாவின் அரசியல் வியூகம் சரியில்லை என்றே தோன்றியது. ஆனால் இந்த முறை அதிக தொகுதிகள் யார் தருவார்கள் என்பதை எதிர் பார்க்காமல், எத்தனை சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்க முடியும் என்கிற கணிப்பில் திமுகவுடன் தேமுதிக கை கோர்த்து இருப்பது சரியானதாகவே தெரிகிறது. இதன் மூலம் பிரேமலதாவின் அரசியல் ஆளுமை நிருபிக்கப் பட்டுள்ளது. தேமுதிக புத்துயிர் பெற்றுள்ளது.
கிடைக்கிற தொகுதிகள் குறைவாக இருந்தாலும், பிரேமலதா உட்பட அவரது குடும்பத்தில் 3 பேர் ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராவதற்கு உரிய தகுதி உருவாகியுள்ளது.
மண்டபத்தை இடிந்து விஜயகாந்துக்கு கொடுமைகளை விளைவித்த திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்திருக்க கூடாது என்று பலரும் சொல்லி வந்தாலும், அவர்களுக்கு விடை கொடுக்கிற வகையில், விஜயகாந்த் அவர்கள் 2016 தேர்தலிலேயே திமுகவுடன் கூட்டணி வைக்க நினைத்தார். அது அப்போது நிறைவேறாமால் போனது. இப்போது நிறைவேறியுள்ளது என்று கூறி பிரேமலதா எதிரிகளின் வாய்களை மூடியுள்ளார்.
2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்று விஜயகாந்த் தலைமையில் அமைத்துக் கொண்டு போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக போன்ற கட்சிகள் திமுகவில் முன்கூட்டியே ஓடோடி சென்று ஒட்டிக் கொண்ட நிலையில், தேமுதிக மட்டும் நாள் கடந்து ஆண்டுகள் பல கடந்த பின்னரே திமுகவுடன் கூட்டணி அமைத்து கொண்டுள்ளது.
இது காலம் கடந்த செயல் என்றாலும், பிரேமலதாவின் அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாக தான் தெரிகிறது. இதனால் வருகிற தேர்தலுக்கு பிறகு தேமுதிகவின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.



