வேலூர், பிப். 18 –
தமிழகத்தில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். முன்னதாக மார்ச் 6ம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்தப் பொதுக்கூட்டம், நிர்வாகக் காரணங்களால் தற்போது மார்ச் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனையொட்டி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகளில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று வேலூர் கோட்டை மைதானத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் கார்த்தியாயினி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இடத்தேர்வு குறித்து கார்த்தியாயினி பேச்சு:
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலப் பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, “பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்கும் இந்த மாபெரும் மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதற்காக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வேலூர் கோட்டை மைதானம், கந்தநேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகள் என மூன்று இடங்களைப் பார்வையிட்டுள்ளோம். இதில் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்றவாறு ஒரு இடம் இன்று மாலைக்குள் இறுதி செய்யப்படும். சுமார் ஒன்றரை லட்சம் பேர் வரை இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்” எனத் தெரிவித்தார்.
5 லட்சம் பேர் திரள்வார்கள் – கரு. நாகராஜன்:
தொடர்ந்து பேசிய மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன், “வேலூர் மட்டுமன்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய அண்டை மாவட்டங்களிலிருந்தும் அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 5 லட்சம் பேர் வரை இந்தப் பொதுக்கூட்டத்தில் திரள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். பிரதமரின் இந்த வருகை தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பிரதமரின் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது



