தருமபுரி, பிப்ரவரி 18 –
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா எர்ரப்பட்டி கிராமம் நாகாவதி அணையிலிருந்து 2025 – 26 ஆம் ஆண்டின் இரண்டாம் போக புன்செய் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கி நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி முன்னிலை வகித்தார்.
இது குறித்து ஆட்சியர் கூறியதாவது: நாகாவதி அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக வருகின்ற 26 – 5 – 2026 வரை 100 நாட்களுக்கு முறைவைத்து அதாவது முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு மண்டலத்திற்கும், அடுத்து ஐந்து நாட்களுக்கு இரண்டாவது மண்டலத்திற்கும் தண்ணீர் விட்டு பின்னர் ஐந்து நாட்களுக்கு நிறுத்தியும் மொத்தம் ஏழு நனைப்புகளுக்கு 117.91 மில்லியன் கன அடி தண்ணீரை தலைமை மதகின் வழியாக திறந்துவிட தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி பெண்ணாகரம் தாலுகா நாகாவதி அணையில் இருந்து தற்போது உள்ள தண்ணீர் வரத்தை கொண்டும் பென்னாகரம் தாலுகாவில் உள்ள ஆயகட்டு பகுதிகளுக்கு பயன்பெறும் வகையில் 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் பென்னாகரம் தாலுகாவில் உள்ள அரகாசனள்ளி, சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை கிராமத்தில் உள்ள 1,993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும்.
எனவே விவசாய பொதுமக்கள் நீர்வள ஆதாரத் துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெரும் நோக்குடன் செயல்பட வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதார செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய சார்ந்த பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



