தருமபுரி, பிப்ரவரி 07 –
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ததால் பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என வணிகர்கள் தெரிவித்தனர். இந்த ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 28 – 9 – 1980 அன்று திறந்து வைத்தார். இதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது தருமபுரி பேருந்து நிலையம் தற்போது இருக்கும் இடத்திலே புதுப்பித்து செயல்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தருமபுரி – பென்னாகரம்
செல்லும் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்த புதிய பேருந்து பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் சோகத்தூர் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை கடந்த 5 – 2 – 2026 அன்று முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதை தொடர்ந்து ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டது. தருமபுரி ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால் 40 ஆண்டு காலமாக இயங்கி வந்த தருமபுரி ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கு முன்பு இயக்கப்பட்டு வந்த ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையத்தை நம்பி இருந்த வணிகர்கள், சிறு தொழில் செய்பவர்கள் தங்களது வாழ்வாதாரமின்றி உள்ளனர்.
இது தொடர்பாக பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் கூறியதாவது. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளை நம்பி தான் நாங்கள் வியாபாரம் செய்து வந்தோம். ஆனால் பேருந்து நிலையம் இடம் மாற்றியதால் எங்களைப் போல் கடை வைத்திருக்கின்றவர்கள் பெருமளவில் பாதிப்படைந்து உள்ளார்கள். மேலும் பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பேருந்துகளை மீண்டும் பழைய பேருந்து நிலையத்திற்கு மாற்றி தந்து எங்களுடைய வாழ்வாதாரத்தையும், வசதியும் செய்து தர வேண்டுமென்று வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.



