நாகர்கோவில், ஜன. 27 –
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை விரைவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஓர் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இதனால் இன்று வங்கிகளில் பணப்பரிவர்த்தனைகள் காசோலைகள் திருத்தம் மற்றும் இதர வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏடிஎம் சேவைகள் மற்றும் இணையவழி வங்கி சேவைகள் தடை இன்றி இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக விடுமுறை என்பதால் ஏடிஎம்களில் பணம் இல்லாத சூழல் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய மயக்க மாவட்ட வங்கிகள் பல்வேறு தனியார் துறை வங்கிகள் 260 வங்கி கிளைகளில் சேர்ந்த சுமார் 1600 பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் மட்டும் ரூ. 200 கோடி அளவு பண பரிவர்த்தனைகள் முடங்கியுள்ளது.
இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி வடசேரியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரதான வங்கி முன்பு ஊழியர்கள் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் குமரி மாவட்ட வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் தலைமை வகித்தார். குமரி மாவட்ட வங்கி ஒன்றிய சங்க தலைவர் சுரேஷ், வங்கி மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.



