நாகர்கோவில், ஜன. 23 –
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருவள்ளுவர் மாணவர் மாநாடு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா,தலைமையில் இன்று (23.01.2026) நடைபெற்றது.
இம்மாநாட்டில் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் பொன் விழாவில் ஆண்டு தோறும் திருக்குறள் மாணவர் மாநாடு தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் என அறிவித்தார்.
அதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டு 2 நாட்கள் திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது. தமிழக அரசின் திருக்குறள் மாணவர் மாநாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலில் நடப்பது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெருமை ஆகும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கு வரவேற்று கொள்கிறோம். இந்நிகழ்ச்சியில் 37 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் என பேசினார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருக்குறள் மாணவர் மாநாட்டில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினை திறந்து வைத்தார்.
நடைபெற்ற மாநாட்டில் இணை ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி (மற்றும்) சிறப்பு அலுவலர் திருக்குறள் பணி முனைவர் வீ.ப.ஜெயசீலன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் எஸ்.கண்ணப்பன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மைய முதல்வர் முனைவர் தே.சங்கர சரவணன், தொடக்கக்கல்வி இணை இயக்குனர் சாமிநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல் குமார், துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



