நாகர்கோவில், ஜன. 22 –
நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு நெல்லையிலிருந்து கனிம வளங்களை ஏற்றி கொண்டு புறப்பட்ட லாரி ஒன்று இன்று அதிகாலை வேளையில் நாகர்கோவில், தேரேகால் புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது திருவனந்தபுரத்திலிருந்து நெல்லை நோக்கி சென்ற டாரஸ் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக டிரைவர்கள் லாரியை விட்டு கீழே இறங்கினார்கள். இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஒரு லாரி முழுமையாக எரிந்தது. மற்றொரு லாரியின் முன் பகுதி தீயில் எறிந்து சாம்பலானது.
இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தீப்பிடித்து சாலை வழியாக வாகனங்கள் இயங்காமல் மற்றொரு சாலை வழியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தீ முற்றிலும் அணைத்த பின்பு நடுரோட்டில் இருந்து லாரிகளை கிரேன்கள் வரவழைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டும்போது டிரைவர் கண்ணசந்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது. மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் லாரிகள் தீப்பிடித்து எரியும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



