திருவட்டாறு, ஜன. 15 –
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தைமாதம் முதல் நாள் முதல் 12 நாட்கள் சந்தன களப அபிஷேகம் நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு சிறப்பு உற்சவம் இன்று தொடங்கியது.
இதையொட்டி காலை நிர்மால்ய தரிசனத்துக்குப் பின்னர் கோவில் கருவறையில் இருந்து ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவர்கள் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எழுந்தருள்கின்றனர். அங்கு அபிஷேகம், தீபாராதனையைத் தொடர்ந்து கருவறைக்கு திரும்புகிறார்கள். தொடர்ந்து 9 மணி அளவில் கோவில் பிரகாரத்தை 3 முறை சுற்றி வரும் ஸ்ரீபலி பூஜை நடந்தது.
பின்னர் உதய மார்த்தாண்ட மண்டபத்தில் 12 கலசங்கள் வைத்து தந்திரி கோகுல் கலச பூஜை நடத்தினார். மேலும் பிரம்ம கலசம் எனப்படும் பெரிய கலசத்தில் சந்தன களபம் நிறைக்கப்பட்டு பூஜை நடந்தது. சுமார் 12 மணி அளவில் ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு களப அபிஷேகம் நடந்தது. அபிஷேகத்திற்குப் பின்னர் பட்டாடை அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
தொடர்ந்து வரும் 26-ம் தேதி வரை 12 நாட்கள் மதியம் களப அபிஷேகம் நடைபெறும். களப பூஜையின் இறுதி நாளான 27-ம் தேதி காலை 10 மணி அளவில் 47 கலசங்கள் வைத்து பூஜை நடைபெறும். பின்னர் மஞ்சள் களப அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பெருந்திரு அமிர்து பூஜை நடைபெறும்.



