நாகர்கோவில், ஜன. 6 –
நாகர்கோவிலில் உள்ள கேசவன்புதூர் பகுதியில் தும்பு ஆலை உள்ளது. இன்று அதிகாலை 2 மணி அளவில் இந்த தும்பு அலையில் இருந்து புகை வந்தது. பின்னர் திடீரென தீ மளமளவென பரவியது.
இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் தலைமை உத்தரவின் பேரில் நாகர்கோவிலில் இருந்து 2 வண்டிகளும், ராஜாக்கமங்கலத்தில் இருந்து ஒரு வண்டி என மொத்தம் 3 வண்டிகளில் சென்று தீயணைத்தனர். அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை சுமார் 5 மணி நேரம் போராடி தீயணைக்கப்பட்டது.
தீ விபத்தில் அங்கிருந்த இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகின. சேதமதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் நாகர்கோவில் அடுத்த பறக்கை ரோட்டில் உள்ள பழைய பொருட்கள் வாங்கி விற்பனைக்கு ஆக்கர் கடையிலும் இரவில் தீ பிடித்துள்ளது. நாகர்கோவில் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரத்தில் மேல் போராடி தீயணைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



