திருத்துறைப்பூண்டி, நவம்பர் 11 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாய நிலங்களை நாசம் செய்யும் பன்றிகளை பிடிக்க திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவு.
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் மட்டும் பன்றிகளின் தொந்தரவு அதிகமாக உள்ளது. குறிப்பாக கட்டிமேடு, ஆதிரெங்கம், சேகல், பிச்சன்கோட்டகம், நெடும்பலம் ஆகிய ஊராட்சிகளில் பன்றிகளால் விவசாய நிலங்கள் பெரியளவில் பாதிக்கப்படுகிறது.
நேரடி நெல் விதைப்பு, விதை நேர்த்தியில் தொடங்கி, அறுவடை காலம் முடியும் வரை பல ஆயிரக்கணக்கான விளை நிலங்களை பன்றிகள் நாசம் செய்து விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து
சமைத்த பாத்திரங்களை தொட்டு நாசம் செய்கிறது. வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை கடிக்க முற்படுகிறது. இதனால் பெற்றோர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
சுகாதார சீர்கேடு மற்றும் விவசாய பயிர்களை கட்டுப்படுத்த கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கங்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையென ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரும்,
தனி அலுவலருமான தெய்வநாயகி பன்றிகளை இரண்டு நாட்களுக்குள் பிடிக்க உரிமையாளருக்கு காலக்கெடு வழங்கியும், மீறினால் அவர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அதையும் மீறி பிடிக்க தவறினால், புதன்கிழமைக்கு பிறகு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் உள்ள ஆட்களை கொண்டு
பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வநாயகி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



