நாகர்கோவில், டிச. 16 –
நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ளது. ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகன உரிமை மாற்றம் உள்ளிட்ட வேலைகள் இந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் நடைபெறும். இதனால் இந்த அலுவலகம் முழுவதும் எப்போதும் மக்கள் அதிகமாக பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் இன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள கணினிக்கு ஒரு ஈமெயில் வந்துள்ளது. அந்த இமெயிலில் இங்கு வெடிகுண்டு வைக்க இருப்பதாக மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளை வைத்து பொதுமக்களை வெளியேற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
யார் இமெயில் அனுப்பினார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.



