மதுரை, நவம்பர் 28 –
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 10 மாதமே ஆன ஒரு பச்சிளம் குழந்தைக்கு வயிற்றில் கீறலிட்டு செய்யும் பெரிய அறுவை சிகிச்சை இல்லாமலேயே வெற்றிகரமாக இரண்டு சிறுநீரகங்களிலும் இருந்த கற்களை அகற்றியுள்ளது.
இது தொடர்பாக முதுநிலை நிபுணர் டாக்டர். D.பால் வின்சென்ட் கூறியதாவது: இக்குழந்தை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது குழந்தையின் சிறுநீர் வெளியேற்றம் முழுமையாக நின்றிருந்தது. மேலும் ரத்தத்தில் கிரியேட்டினின் அளவு ஆபத்தான நிலையில் 4.4 ஆக உயர்ந்திருந்தது. அந்த நிலையில் எந்த ஒரு சிகிச்சைகளும் மேற்கொள்ள இயலாது. உடனடியாக மருத்துவர்கள் சிறுநீரகத்தில் நேரடியாக குழாய் அமைத்து சிறுநீரை வெளியேற்றி , 48 மணி நேரத்திற்குள் கிரியேட்டினின் அளவு 0.4 என்ற இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதன் பின்பு இரு சிறுநீரகங்களிலும் ஒரே நேரத்தில் ‘மினி பி.சி.என்.எல்’ எனப்படும் நவீன நுண்துளை சிகிச்சை முறையை மேற்கொண்டனர். இச்சிகிச்சை முடிந்த குழந்தைக்கு சிறுநீர் சீராக வெளியேறியது.
இந்த செயல்முறையில், சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு ஒரு மிகச்சிறிய துளை வழியாக ஒரு சிறிய குழாய் ஒன்று சிறுநீரகத்திற்குள் செலுத்தப்படும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, இப்பச்சிளம் குழந்தையின் ஒரு சிறுநீரகத்தில் இருந்த 2 செ.மீ அளவிலான கல்லும், மற்றொரு சிறுநீரகத்தில் 1 செ.மீ அளவுடன் மூன்று கற்கள் ஒருங்கிணைந்து பெரிதாக 3 செ.மீ அளவில் இருந்த கல்லும் அகற்றப்பட்டது.
மேலும் குழந்தைகளுக்கான சிறுநீரக சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மிகச்சிறிய ஸ்கோப் கருவிகள் உட்பட மேம்பட்ட நவீன சாதனங்களின் மூலம் சிகிச்சையளிப்பதில் சிறப்பு நிபுணத்துவம் கொண்டுள்ளது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பெரிய அறுவை சிகிச்சையைத் தவிர்த்து, நவீன முறையில் சிகிச்சை அளிப்பதில் இம்மருத்துவமனை சிறந்து விளங்குகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் மட்டும் 12 குழந்தைகளுக்கு சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு இவ்வகையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற சிகிச்சை முறைகள் மூலம் உடலில் தழும்புகள் ஏதுமின்றி, நுண்துளை சிகிச்சைகள் மூலம் சிறுநீர்ப் பாதை வழியாகவே சென்று கற்களை உடைத்து அகற்றும் நவீன சிகிச்சைகளாகும் என்று கூறினார். இந்த சந்திப்பின் போது மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர்கள் கண்ணன், வேணுகோபால், கோணங்கி ஆகியோர் உடனிருந்தனர்.



