கன்னியாகுமரி, நவ. 24 –
கன்னியாகுமரியில் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் பொன் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 25 மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் பொன் பாஸ்கரன், குத்துச்சண்டை விளையாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பெரும் ஆதரவு வழங்கி வருவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டில் மட்டும் குத்துச்சண்டை கழகத்தின் மூலம் பயிற்சி பெற்ற 6 வீரர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ரயில்வே துறையில் 8 வீரர்கள் நியமனம் பெற்றுள்ளனர். சென்னையில் இரண்டு புதிய பயிற்சி மையங்களை அமைக்க மாநில அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
தமிழகம் முழுவதும் பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பல பள்ளி, கல்லூரிகள் இதற்கு உறுதுணையாக உள்ளன.
சமீபத்திய தமிழ்த் திரைப்படங்களில் குத்துச்சண்டைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதால், இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டை மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும், குத்துச்சண்டை பயிற்சி, உடல் பலத்துக்கு யோகாசனம் போல மன அமைதியும் தன்னம்பிக்கையும் அளிக்கும் பயிற்சி என்பதால், இளைஞர்களுக்கு இது பெரும் பலன் தருகிறது என விளக்கினார். மேலும் பெண் குத்துச்சண்டை வீரர்களை உருவாக்கியதில் தமிழ்நாடு தேசிய அளவில் முதல் இடத்தில் இருப்பதாகவும், இந்தியாவில் அதிக பெண்கள் குத்துச்சண்டை பயிற்சி பெறுவது தமிழகமே என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டை கழகத் தலைவர் ஜஸ்டின் ராஜ், செயலாளர் ராஜ் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்தில் கழகப் பொருளாளர் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



