நாகர்கோவில், நவ. 24 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் – இரணியல் பிரதான சாலையில் உள்ள நுள்ளிவிளை பகுதியில் ரயில்வே மேம்பாலத்தை இடித்து புதிய பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து அதற்காக அளவீடு செய்து பொதுமக்கள் நிலங்களை கையகப்படுத்தி பணிகள் தொடங்கியது.
இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் 24.11.2025 தேதி ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் மாற்று பாதையை பயன்படுத்தி கொள்ள அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாற்றுப்பாதை அமைக்காமல் இந்த மேம்பாலத்தை இடிக்க கூடாது என 40 ஊரை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்காக இன்று ஊர் தலைவர்கள் தலைமையில் விஜய் வசந்த் எம்.பி. முன்னிலையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொட்டும் மழையும் பாராமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். இதில் பொதுமக்கள் கூறும் போது: மாற்றுப்பாதை அமைக்காமல் இந்த பாலத்தை இடித்தால் 40 ஊரை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி வர நேரிடும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படும். மேலும் இந்த சாலை வழியாக தான் பல்வேறு ஊர்களுக்கு வாகனங்கள் போக்குவரத்து நடைபெறுகிறது.
இதனால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். எனவே மாற்று பாதை அமைத்த பின் இந்த மேம்பாலத்தை இடிக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி முன்னிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். விஜய் வசந்த் எம்.பி.யும் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டம் நிறைவு பெற்றது. அப்பகுதியினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.



