முத்துப்பேட்டை, நவம்பர் 24 –
கடந்த மாதம் குறுவை அறுவடை பணிகள் முடிந்து விவசாயிகள் இரண்டாம் போக சாகுபடியாக தாளடி நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு வார காலத்திற்கு டெல்டா மாவட்டங்களில் மிகக்கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கன மழையால்
25 நாட்களே ஆன தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக மாங்குடி, வடசங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், குன்னலூர், ஆலத்தம்பாடி, மணலி, மேலமருதூர், கட்டிமேடு, கொக்காலடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 2000 ஏக்கர் தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
குறிப்பாக வடிகால் வாய்க்கால் சில இடங்களில் சரிவர தூர் வாராததாலும், வெங்காயத் தாமரை படர்ந்து தண்ணீரின் ஓட்டம் தடைபட்டுள்ளதாலும் தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தண்ணீரை வடியவைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய நிலையில் வயல்களிலிருந்து மோட்டார் இன்ஜின் மூலம் தண்ணீரை இறைத்து வெளியேற்றி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தின் தெரிவித்துள்ளார்.
கனமழை பெய்யும் நாட்களில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிப்பு வெளியிட வேண்டுமெனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



